தோழி/தோழர்களே,
சூரியனிலிருந்து வெடித்து சிதறிய நாள் தொட்டு பூமி மாறிக் கொண்டே தான் இருக்கிறது, நாமும் கூட தான் மாறிக் கொண்டே இருக்கிறோம், ஒவ்வொரு காலம் தொட்டும் நம் உணவு மாறியிருக்கிறது, நம் உடை மாறியிருக்கிறது, ஏன் நம் உடல் அமைப்பே மாறியிருக்கிறது, ஆனால் மாறாத ஒன்று உண்டு, அது காதலிப்பது, அன்று காதலித்தோம், இன்று காதலிக்கிறோம் நாளையும் காதலிப்போம்....
கடவுள் இல்லாது போனாலும் கவலையில்லை ஆனால் காதல் இல்லாது போனால், காதல் தொலைத்து பின் எதை வாங்க? காதல் மட்டும் இல்லாது போனால் களவி ஏது , கவிதை ஏது, கலை ஏது??? இப்படி காதலின் அருமை எனக்கே புரிகிறதுயென்றால் சங்க தமிழனுக்கு என்ன தெரியாதா? வீரம் ஒரு கண் என்றால் காதல் மரு கண் அவனுக்கு, ஆதலால் தான் ஒன்றல்ல இரண்டல்ல 401 காதல் கவிதைகள் தொகுத்திருக்கிறான் குறுந்தொகை எனும் பெயர் கொண்டு, இனி வரும் பதிவுகளில் ஒவ்வொரு சங்க கால குறுந்தொகை காதல் கவிதையையும் அதன் எளிய உரையோடும் முடிந்தால் என்னுரையோடும் பகிர்ந்துக் கொள்ளப் போகிறேன், இது என் சிறு முயற்சி, காதலுக்காகவும் காதலர்களுக்காகவும்...இனி காதல், காதல், காதல் மட்டுமே....
என்றும் காதலுக்காக,
காதலுடன்,
தோழன் மோகன்...
முதல் பாடல்:
குறிஞ்சி – தலைவன் கூற்று
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது, கண்டது மொழிமோ;
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே.
- இறையனார்
எளிய உரை:
நீயே சொல் வண்டே…
பார்த்துப் பார்த்து தேன் தேடி வாழும்
அழகிய இறக்கை வண்டே
எனக்காகப் பொய் சொல்லாமல்
பார்த்ததைச் சொல்,
மயில் போன்றவள், அழகான பற்களுடைய
அந்தப் பெண்ணின் கூந்தலைவிட
அதிக வாசனையுள்ள பூ உள்ளதா சொல்…
என்னுரை:
இந்தப் பாடல்தான் இறையனார் எழுதிக்குடுக்க தருமி வாங்கீட்டுப் போய் வம்புல மாட்டிக்கிட்டது.இந்த பாடல் படி பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மனம் உண்டு, ஆனால் நக்கீரரின் வாதப்படி, பூக்கள் சூடுவதாலோ வாசனை திரவியங்கள் பயன்படுத்துவதாலோ தான், பெண்களின் கூந்தலுக்கு மனம் உண்டு... எது எப்படியோ இது ஓர் அருமையான காதல் கவிதை, இருந்தாலும் எனக்கு இறையனார் சொல்வது தான் சரியெனபடுகிறது... உங்களுக்கு???