Unknown
குழந்தைகள் குழந்தைகளாக மட்டுமே இருக்கட்டும்

அம்மா, அப்பா
நீங்கள்
இந்துவோ?
கிறிஸ்துவரோ?
இஸ்லாமியரோ?
எனக்கு பிரச்சனையில்லை
நான்
ஒரு குழந்தை
குழந்தை மட்டுமே....
உலகத்தீரே!
ஓர் உண்மைச் சொல்லுங்கள், உங்கள் மனதில் முதன் முதலாய் தோன்றிய கடவுள் நம்பிக்கை பயமுறுத்தி வந்ததா? பழக்கத்தால் வந்ததா? இரண்டில் ஒன்று தான் நிச்சிய காரணம், ஏன்? என்றால் இந்தியாவில் எந்த மூலையில் பிறந்தாலும் அந்த குழந்தையோடு அதன் சாதியும், மதமும் சேர்த்தே பச்சை குத்தப் படுகிறது.

குழந்தைகள் கண்திறக்கும் போதே, அது ஆண்டவன்யிட்ட பிச்சை அல்லது அருள் என்று ஆரம்பிக்கிறோம் நம் மூலை சலவையை, நா கூசமால் நாம், பத்து மாதம் பாடாய் பாடு பட்டு, உயிர் வலி அனுபவித்து, உதிரம் சிந்தி பெற்று எடுத்த அந்த அன்னையை வைத்துக் கொண்டே ஆண்டவன் அருள் என்று பிதற்றுகிறோம், நாம் நம்பினால் மட்டுமே குழந்தை பிறப்பு என்பது கடவுள் அருள் ஆனால் அந்த அன்னை அனுபவித்த வலியும், அவர் சிந்திய ரத்தமும் தான் எதார்த்தம், நாம் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும், ஆனால் நாம் எப்போதுமே நம் குழந்தைகளுக்கு எதார்த்தங்களை தருவதில்லை, நமது நம்பிக்கைகளையும், கற்பனைகளையுமே திணிக்கிறோம் அதனால் தான் பெற்ற தாயையே எட்டி உதைத்து முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் பக்திமான்களை உருவாக்கியிருக்கிறோம்,

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்... நான் உன்னை பெற்று எடுத்ததால், இது தான் உன் மதம், இது தான் உன் கடவுள், இது தான் உன் புனித நூல் என்று குழந்தைகளின் மூலையில் திணிப்பது கண்டிப்பாய் உரிமை மீறல் தானே? குழந்தைகள் என்றால் அவர்களுக்கு சுயம் இல்லையா என்ன? நாம் உயிர் கொடுத்தோம் என்பதற்காக அவர்களுக்கு உரிமையில்லை என்று ஆகிவிடுமா?
அப்படினா எதுவுமே சொல்ல வேண்டாமா? அவர்களுக்கு நல்லது கெட்டது தெரியாதே, நாம் தானே கற்றுக் கொடுக்க வேண்டும், அது நம் கடமை என்ற உங்கள் ஆதங்கம் சரிதான்...

ஆனால் என் கேள்வி அதற்கு மதமோ? கடவுளோ? தேவையா என்பதே?

நிதானமாய் வாசித்து பாருங்கள் கீழே உள்ள வழிமுறைகளை,

திருடினால் கடவுள் கண்ணை குத்திடும்.

மற்றவர்களுக்கு தீங்கு செய்தால் நரகத்தில் எண்ணெய் கொப்பரையில் போட்டு வதுக்குவார்கள்

சாப்பிடு இல்லைனா பூச்சாண்டிகிட்ட பிடுச்சி கொடுத்துறுவேன்

இவைகள் சாதரணமாய் நம் குழந்தைகளை நல்வழிபடுத்த நாம் பயன்படுத்துவது...

இவைகளையே கீழ் வருவது போல கற்றுக்கொடுக்கலாம் இல்லையா?

குட்டி பாப்பா, அந்த மழையை பார், எப்போதுமே எல்லோரையும் சமமாக, ஏற்ற தாழ்வுயில்லாமல் அன்பு மழை பொழிகிறதே அது போல் நீயும் எல்லோரையும் சமமாக பார்!

செல்லம் அதோ பார், அந்த மரத்தை எப்படி தான் வெயிலிலோ மழையிலிலோ நனைந்தாலும் தன்னை நம்பி வந்தவர்களுக்கு குடையாய் நிற்கிறது அது போல் நீயும் எல்லோருக்கும் உதவுணும்.

கன்னுக்குட்டி! இந்த பந்தை பார், இத எவ்வளவு வேகத்தில் நான் எறியிறேனோ அதே வேகத்தில் சவரில் பட்டு திரும்பி வரும், அது போல் தான் நீ நல்லது பண்ணினால் நல்லது திரும்பி வரும், கெட்டது பண்ணினால் கெட்டது திரும்பி வரும்.

இந்த இரண்டு வழிமுறைகளில் எதை தேர்வு செய்வது என்பது ஒவ்வொரு பெற்றோரின் விருப்பம்,

என் கேள்வி...

பட்டாம்பூச்சி பிடித்து விளையாடும் அந்த பிஞ்சு கைகளில் பைபிள் திணிப்பதோ?

நீ மற்றவர்களை காட்டிலும் உயர்ந்த சாதியில் பிறந்தவன் என்று உணர்த்தும் படி அந்த கல்லம் கபடம் அற்ற குழந்தையின் தோள்களில் பூநூல் போடுவதோ?

ஏன்? எதற்கு? என்று சொல்லாமல் வம்பிடியாய் குழந்தையின் தலையில் தொப்பி மாட்டிவிடுவதோ? எந்த வகையில் சரி? இது எப்படி அறிவுசார் செயலாக முடியும்?

இவைகள் போல் தொடர்ந்து நாம் குழந்தைகள் மீது திணிபதற்கு காரணம், "என்னால் உருவானவர்கள் தானே, என் நம்பிக்கைகளை, என் கற்பனைகளை, என் கனவுகளை, எனது பொதுபுத்திகளை என் குழந்தைகள் மீது திணிப்பதும் அவர்கள் அதை சுமப்பதும் என்ன தவறு? அதை கேட்க நீ யார்?" என்று வாதிட்டால் ஒரு கேள்வி நண்பர்களே...

இந்த மனப்பான்மை அன்பினாலா? ஆதிக்கத்தினாலா?

அன்பு தான் ஆனால் ஆதிக்கம் கலந்த அன்பு என்று நீங்கள் சப்பை கட்டு கட்டினால், பதில் சொல்லுங்கள்

பருவம் பெற்ற நம் பிள்ளைகள் நாம் பின்பற்றிய மதத்தையோ, நம்பிக்கையையோ புறகணிக்க்கூட வேன்டாம், கேள்வி கேட்டாலே ஏன் நாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிக்கிறோம், நம் பிள்ளைகள் சுயமாய் சிந்திக்கிறார்கள், அவர்களுக்கு முடிவு எடுக்க சுதந்திரம் இருக்கு என்று நாம் ஏன் உணர்வதுமில்லை, அவர்களை விடுவதுமில்லை?

எப்பா! சாமி!!! என்ன பெத்தவங்க இப்படி தான் வளத்தாங்க, நானும் இப்படி தான் வளர்ப்பேன், உலகத்தில எல்லோரும் இப்படி தான் வளக்குறாங்க, இது தான் சரி என்று என்னிடம் வேதம் ஓதாதீர்கள் நான் தெளிவாகவே இருக்கிறேன்.

என் குழந்தை மீது நான் உறுதியாய் எதையும் திணிக்க மாட்டேன், எந்த சாயமும் அவர்கள் மீது நான் பூசப் போவதுயில்லை, என் குழந்தை ஓர் குழந்தையாக மட்டுமே வளரும்.

அதோ!!! என் குழந்தை வளர்ந்து பணி செய்து கொண்டுயிருக்கிறாள் அவள் கழுத்தில் ஏதோ கயிறு இருக்கிறது, ஒரு வேளை அதில் ஏசுவோ, அல்லாவோ, பிள்ளையாரோ தொங்கி கொண்டுயிருக்கலாம் அல்லது வெறும் கருப்பு கயிறாகவும் இருக்கலாம், எதுவாயினும் அது அவள் அவளுக்காக அவளே தேர்வு செய்துக் கொண்டது! நான் திணித்தது அல்ல!!!

வாருங்கள் தோழியர்களே, தோழர்களே புதியதோர் உலகம் குழந்தைகளுக்காக உருவாக்குவோம், அதில் குழந்தைகள் குழந்தைகளாக மட்டுமே இருக்கட்டும்...

என்றும் நம்பிக்கைகளுடன்,
குழந்தை மூலைசலவையின் எதிர்பாளன்,
தோழன் மோகன்


பின் குறிப்பு:
இது ஒரு முன்னுரையே நிறைய விவாதிக்க, எழுத வேண்டியிருக்கிறது, வலைபதிவுகளில் இருக்கும் அம்மாக்களும், அப்பாக்களும் இந்த பார்வை பற்றி கருத்து சொன்னால் நன்றாக இருக்கும்.
Related Posts with Thumbnails

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner